rajni, chandrababu naidu
rajni, chandrababu naidu pt web
இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

PT WEB

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன் ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக ஆந்திர மாநில சிஐடி போலீசாரால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை ராஜமன்றி சிறையில் 14 நாட்கள் ரிமாண்டில் வைத்தனர்.

ரஜினிகாந்த் - சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்க்கு போன் செய்து தைரியமாக இருக்குமாறு கூறி, ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில், “எனது அருமை நண்பரான சந்திரபாபு தவறு செய்ய மாட்டார். அவரது நற்செயல்களும், தன்னலமற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும். சந்திரபாபு எப்போதும் மக்கள் நலனுக்காக பாடுபடும் சிறந்த போராளி” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் பின்னணி...

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு 2015 ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மாநில அரசு 10 சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி பில் மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டி-யை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தத் திட்டத்துக்கான செலவை, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஐ.டி கூறியுள்ளது. 2017-18-ல் ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஐடி ரிமாண்ட் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.