model image twitter
இந்தியா

ராஜஸ்தான் | பிரசவத்துக்கு சென்ற கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பு.. மருத்துவமனை வாசலிலேயே பிறந்த குழந்தை!

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணியை, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்தது. இந்தச் சம்பவத்தில் அலட்சியம் காட்டிய மருத்துவர்களை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

Prakash J

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக கர்ப்பிணி ஒருவர், கடந்த 3ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது.

model image

மருத்துவமனையின் இந்த அலட்சியத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன்பேரில் அலட்சியமாக இருந்த 3 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில மருத்துவக் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங், ”இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்பேரில், கன்வாடியா மருத்துவமனையின் 3 ரெசிடென்ட் மருத்துவர்களான குசும் சைனி, நேஹா ரஜாவத், மனோஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை

மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய கன்வாடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர சிங் தன்வாருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!