இந்தியா

ராஜஸ்தானில் ஜூன் 8 வரை முழு பொது முடக்கம்

jagadeesh

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு பொது முடக்கத்தை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் கோவிட் தொற்றால் இதுவரை 7,703 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 9 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அம்மாநிலம் கொரோனா தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அம்மாநிலத்தில் முழு பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் இப்போது நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் 8 ஆம் தேதி காலை 5 மணி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 முதல் ரூ.1000 அபராதமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வெளி மாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வருபவர்கள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சோதனைக்கு உட்படாதவர்கள் 15 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.