ராஜஸ்தான்  முகநூல்
இந்தியா

ராஜஸ்தான் | ’5 லட்சம் வரதட்சணை வேண்டாம்... 1 ரூபாய், ஒரு தேங்காய் போதும்’ நெகிழ வைத்த மணமகன்!

ராஜஸ்தானில் திருமணத்தின் போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ 5,51,000 பணத்தை அவர்களிடமே திருப்பி அளித்து வெறும் 1 ரூபாயையும் ஒரு தேங்காயையும் ஏற்றுக்கொண்டுள்ள மணமகனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜெனிட்டா ரோஸ்லின்

ராஜஸ்தானில் திருமணத்தின் போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ 5,51,000 பணத்தை அவர்களிடமே திருப்பி அளித்து வெறும் 1 ரூபாயையும் ஒரு தேங்காயையும் ஏற்றுக்கொண்டுள்ள மணமகனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிவில் சர்வீஸ் ஆர்வலரான பரம்வீர் ரத்தோர்.. இவருக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி கரலியா கிராமத்தில் நிகித என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பொதுவாகவே, வட இந்திய திருமணங்களில், மணமகனை திருமண மண்டபத்திற்கு அழைத்துவர குதிரையை பயன்படுத்துவது வழக்கம்.

இப்படிதான், ரத்தோரின் திலக விழாவும் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த திலக விழாவில், ஏராளான பரிசு பொருட்கள் வந்தன.

அதில், ரூ. 5,51,000 ரொக்கமும் ஒரு பகுதி. இதனைக் கண்ட ரத்தோர், வரதட்சணை மாதிரியான விஷயங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பத்தை சுட்டிக்காட்டி, அதற்காக வருத்தமடைந்து, வரதட்சணை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, பணத்தை அவர்களிடமே திருப்பி அளித்து வெறும் 1 ரூபாயையும் ஒரு தேங்காயையும் மட்டுமே வரதட்சணை சடங்காக வாங்கியுள்ளார்.

இதுகுறித்து ரத்தோர் தெரிவிக்கையில்,

“ நான் ஒரு சிவில் சர்வீஸ் ஆர்வலர். நான் அதிகம் படித்திருக்கிறேன். படித்தவர்களே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், யார் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்தேன். நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது முடிவுக்கு எனது பெற்றோரும் ஆதரவளித்தனர்.

எனக்கும் ஒரு சகோதரி இருக்கிரார். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையெனில், சமூகத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? .. இதுபோன்ற மாற்றங்கள் எதாவது ஒரு இடத்திலாவது தொடங்க வேண்டும்.

எனக்கு வரதட்சனை கொடுக்கப்பட்டபோது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து சமுதாயத்தில் இருப்பது கண்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

திருமண சடங்குகள் நடந்துவந்ததால் வரதட்சணையை உடனடியாக வேண்டாம் என்று கூறமுடியவில்லை. பிறகு, குடும்ப உறுப்பினர்களிடம் பேசி பணத்தை திருப்பி அவர்களிடத்திலேயே தருமாறு கூறினேன். “ என்று தெரிவித்துள்ளார்.

ரத்தோரின் தந்தையும் விவசாயியுமான ஈஸ்வர் சிங், தெரிவிக்கையில்,” இன்று, பெண்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை முன்னிருத்துகிறார்கள். அதனால்தான், எங்களால் பணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சடங்குகளின் ஒரு பகுதியாக ஒரு தேங்காயையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் மட்டுமே பெற்றுக்கொண்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ரத்தோர் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.