இந்தியா

ராஜஸ்தான் சட்டசபை : நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி

webteam

ராஜஸ்தான் மாநில சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பிரிந்து சென்றார். அவருடன் 18 எம்.எல்.ஏக்களுடன் சென்றிருந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது தலைமையிலான அரசு சச்சின் பைலட் ஆதரவின்றி, பெரும்பான்மையை நிரூபிக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியாங்கா காந்தி ஆகியோரை சந்தித்த பின்னர் சமரசம் அடைந்த சச்சின் பைலட், நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் கெலாட்டை சந்தித்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் சட்டசபை இன்று கூடியது. இதில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், குரல் வாக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு அந்த அரசுக்கு ஆட்சியில் பிரச்னை இருக்காது.