இந்தியா

“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

webteam

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்த சம்பவத்தை போன்று, ராஜஸ்தானிலும் இளைஞர் ஒருவரின் கழுத்தை போலீசார் கால்களால் அழுத்தி தாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த காவல் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். ஜார்ஜ் பிளாய்டு எவ்வளவோ அலறிய போதும் அந்த காவலர் கழுத்தில் இருந்து காலை எடுக்கவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவலரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.


இந்நிலையில் அதனை போன்றே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முகேஷ் குமார் என்பவர் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை அங்கிருந்த காவலர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் காவலர்களுக்கும் முகேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் முகேஷ் குமாரை கீழே தள்ளிய காவலர் ஒருவர், அவரின் கழுத்தில் முழங்காலை வைத்து நசுக்கியுள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்த தொலைபேசியை பறித்த காவலர் அவரை அழைத்துச் சென்றார். இதனையடுத்து இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, சமூக வலைதளவாசிகள் இந்தச் சம்பவம் ஜார்ஜ் பிளாய்டுக்கு அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை ஒத்து இருப்பதாக சொல்லி தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.