இந்தியா

”ரயில்வே ஒரு போதும் தனியார்மயமாக்கப்படாது” - அமைச்சர் பியூஷ் கோயல்

webteam

ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும் அது எப்போதும் அரசாங்கத்திடம் இருக்கும் என்றும் ரயில்வேத்துறை  அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர், “ இந்திய ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் சாலையில் அரசு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என மக்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். ஏனெனில் பொருளாதார மேம்பாட்டுக்கு தனியார் மற்றும் அரசு வாகனங்கள் என இரண்டுமே உதவும். ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும். இதன் மூலம் ரயில்வே சேவையை இன்னும் மெருகேற்ற முடியும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “பிரதமர் மோடியின் புதிய சிந்தனையின் படி, ரயில்வே துறையின் கட்டுமான அமைப்பு புதிய வடிவம் பெற இருக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் அனைத்துப் பகுதிகளின் பொருளாதாரமும் உயரும். இந்திய ரயில்வே துறை நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தனியார்துறையும், அரசும் இணைந்து பணியாற்றும்போது மட்டும் தான் அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “ கடந்த இரண்டு வருடங்களில் ரயில் விபத்து காரணமாக ஒரு ரயில் பயணி கூட உயிரிழக்கவில்லை. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு பயணி இறந்தார்” என்று கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் வகையில் 100 நாள் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் ரயில்வே துறையில் தனியார் ரயில்கள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள், இடது சாரி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.