உலகளவில் தனியார் நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை சட்டென்றி பணி நீக்கம் செய்து ஆட்குறைப்பு நடவடிக்கையை கையாண்டு வரும் சூழலில் அந்த வரிசையில் தற்போது இந்திய ரயில்வே துறையும் சேர்ந்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 2 சதவிகித பேரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரயில்வே வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கூடவே, பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக புதிய கவலைகளையும் எழுப்பியுள்ளது.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக திகழ்கிறது இந்திய ரயில்வே துறை. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாகவும் ரயில் போக்கு வரத்தே நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது. கூடவே இந்தியாவின் மூலை முடுக்குக்கள் வரைக்கும் ரயில் வண்டியின் தண்டவாளங்களும் ரயில் வண்டிகளும் ரயில்வே ஊழியர்களும் தடம் பதித்துள்ளார்கள். சுமார் 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வருகின்ற நிலையில், அதில் 2 சதவிகித பணியாளர்களை அதாவது சுமார் 30,000 பேரை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெற்கு மண்டல ரயில்வேயில் மட்டும் 1,900க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும், சென்னை பகுதியில் உள்ள முக்கிய ரயில் பெட்டி தயாரிப்பு நிலையத்திலும் பல பணியிடங்கள் குறைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. அதே சமயம், நாட்டில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டை பாதைகள் அமைத்தல், மின்மயமாக்கல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கூடவே, புதிய நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சேவையில் சேர்க்கப்பட்டும் வருகிறது. அதன்படி பார்த்தால், தற்போதுள்ள அதிக பணிகள் காரணமாக, கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுமே தவிர, பணியாளர்களை குறைப்பது சரியான முடிவாக இருக்காதென ரயில்வே ஊழியர்கள் சங்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றன. மேலும், ஏற்கனவே போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்போது பணியிலுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் செயலாகவே இந்த ஆட்குறைப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ரயில் பாதைகள் பராமரிப்பு, சிக்னல் கண்காணிப்பு, ரயில்களின் பராமரிப்பு போன்ற முக்கிய பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரிப்பதால் தவறுகள் நிகழும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதானல் ரயில்வே மீது பொது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும், பிரதான போக்குவரத்தாக திகழும் ரயில் சேவையை மக்கள் நிராகரிக்கவும், பயணிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகவும் வாய்ப்புள்ளதாகவும் ஊழியர் சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டாலும். இந்த முடிவு, ரயில்வே சேவையின் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்டும் என்றும் குறிப்பாக ஆட்குறைப்பு என்ற பெயரில் கடைநிலை மற்றும் இடை நிலையிலுள்ள ஊழியர்களே பெரியளவில் நீக்கப்படுவருவார்கள் என்ற பெரும் குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.