இந்தியா

மார்ச் - ஜூலையில் ரயில் டிக்கெட் ரத்து: ரீஃபண்ட் பெற காலவரம்பு 9 மாதங்கள் வரை நீட்டிப்பு

webteam

கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பை, பயண தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை இந்திய ரயில்வே நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், '2020 மார்ச் 21ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பை, பயண தேதியிலிருந்து ஒன்பது மாதம் வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே ரத்து செய்த, கால அட்டவணைப் பட்டியலில் உள்ள வழக்கமான ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும். ஒருவேளை பயணச் சீட்டு 139 என்ற எண் மூலமோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலமோ ரத்து செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்ட பயண காலத்துக்கான டிக்கெட்டுகளை, முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பும், பயண தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயண தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, பல பயணிகள், பயணச்சீட்டுகளை ரயில்வே மண்டல அலுவலகத்திலோ அல்லது டிடிஆர் மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். முன்பதிவு மையங்களில் வாங்கிய அந்த பயணசீட்டுகளுக்கு, பயணிகள் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவர்' என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.