இந்தியா

மக்களவையில் கண் அடித்த ராகுல்காந்தி: நடிகை வரவேற்பு

webteam

மக்களவையில் ராகுல்காந்தி நேற்று பேசிய பிறகு அருகில் இருந்த உறுப்பினர்களை பார்த்து கண் அடித்தார். இதனை கண் அசைவில் பிரபலமான நடிகை பிரியா வாரியார் வரவேற்றுள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன் வைத்தார். கடும் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, பேச்சை முடித்த பின்னர், நேராக மோடி இடத்திற்கு சென்று அவரை கட்டித் தழுவினார். இதனை மோடி எதிர்பார்க்கவில்லை. மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்து அனுப்பினார். அத்தோடு இது நிற்கவில்லை. தன்னுடைய இடத்தில் வந்த அமர்ந்த ராகுல் அருகில் இருந்த உறுப்பினர்களை பார்த்து கண் அடித்தார். இந்த நிகழ்வுகள் நாடாளுமன்றத்தில் கலகலப்பை உண்டாக்கியது. இதனிடையே ராகுல்காந்தி மக்களவையில் கண் அடித்த சம்பவத்தை பலரும் விவாதப் பொருளாகவே மாற்றினர். கண் அசைவில் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியார் உடன் ஒப்பிட்டும் மீம்ஸ்கள் பறந்தன. 

இந்நிலையில் ராகுல்காந்தியின் கண் அசைவிற்கு பிரியா வாரியார் வரவேற்பு தெரிவித்துள்ளார். புதிய ட்ரெண்டாக மாறிய நிகழ்வு குறித்து அவரிடம் கேட்டதற்கு, தான் கல்லூரியில் இருந்து வந்தவுடன் இந்த செய்தியை பார்த்தாகவும், இதனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். தன்னுடைய திரைப்படத்தின் அடையாளத்தை ராகுல் காந்தி வெளிக்காட்டியது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரியா வாரியார் தெரிவித்தார்.