Rahul Gandhi  PT
இந்தியா

பீகார் | வேலைவாய்ப்புக்குப் பதிலாக லத்தி சார்ஜ்.. பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி!

மாணவர் தலைவரான திலீப் குமார், பீகார் பொதுப்பணி ஆணையம் வேலைக்கு ஆட்சேர்ப்பதைத் தொடர்ந்து தாமதப்படுத்துவதாகவும், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

PT WEB

பீகார் பொதுப்பணி ஆணையத்தின் ஆசிரியர் நியமன அறிவிப்பு தாமதத்தை எதிர்த்து பாட்னாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை லத்திசார்ஜ் நடத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு கோரி அமைதியாகப் போராடிய இளைஞர்களுக்கு தடியடி மட்டுமே பதிலாக வழங்கியதாக ராகுல் காந்தி பாஜக அரசை குற்றம்சாட்டி, வேலையின்மை இந்தியாவின் மிகப்பெரிய நோயாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளார்.

பீகார் பொதுப் பணி ஆணையத்தின் (BPSC) நான்காம் கட்ட ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, நேற்று காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்; அளவுக்கு அதிகமாக தடியடி நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

eaching aspirants taking a protest

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. அவர், தனது X தளத்தில் நேற்று பாட்னாவில், வேலைவாய்ப்புக்கான தங்கள் உரிமையை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், பீகார் காவல்துறையினரால் மீண்டும் ஒருமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இன்று இந்தியாவில் வேலையின்மைதான் மிகப்பெரிய நோயாக உருவெடுத்துள்ளது; இதனால் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பட்டங்களையும் திறன்களையும் கையில் ஏந்தியவாறு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பாஜக அரசாங்கம் அவர்களைப் பற்றி சற்றும் கவலைப்படுவதில்லை. தங்கள் உரிமைகளைக் கோரி இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடும்போது, ​​அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை; மாறாக, அவர்களின் முதுகுகளில் தடியடிகள் சரமாரியாகப் பொழியப்படுகின்றன.

பாஜகவின் பொய்களால் இந்தியாவின் இளைஞர்கள் சலிப்படைந்துவிட்டனர். அவர்கள் இனிமேலும் அமைதியாக இருக்கப்போவதில்லை. மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்குத் துணையாக நிற்கும். வேலையில்லாத இளைஞர்களுக்கு பாஜக அரசு அளிக்கும் ஒரே பதில் தடியடி மட்டுமே எனவும் பதிவிட்டுள்ளார்.