புதுச்சேரியில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணச் சேவை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பரப்புரைக்குச் சென்ற ராகுல் காந்தி, காங்கிரஸ், திமுக மற்றும் விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் சுமார் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 40ஆக அதிகரிக்கப்படும் எனவும் புதுச்சேரியில் 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். அதேநேரத்தில், ஒவ்வொரு டெண்டருக்கும் 30 விழுக்காடு கமிஷன் வாங்கப்படுவதாகவும், ஊழல் மலிந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காரைக்கால் துறைமுகம் விற்கப்பட்டு விட்டதாகவும், அடுத்ததாக மின்வாரியமும் அதானி குழுமத்திற்கு விற்கப்படக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார். புதுச்சேரி மக்களுக்கும் தனக்குமான உறவு, தன் குடும்பத்தோடு பிணைக்கப்பட்ட ஆழமான உறவு என ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.