இந்தியா

“பாரத மாதாவிடம் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்” - ராகுல் காந்தி

webteam

நாட்டில் தடுப்பு காவல் மையங்கள் எதுவும் இல்லை என பாரத மாதாவிடம் பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பிரதமர் குறித்து ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதமர் என்று விமர்சித்துள்‌ளார். இஸ்லாமியர்கள் தடுப்புக் காவல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வதந்தி பரப்புகிறார்கள் என்று பிரதமர் பேசிய காணொலியையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அசாமில் கட்டமைக்கப்படுவதாகக் கூறப்படும் தடுப்புக் காவல் மையம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி மீதான ராகுலின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. தடுப்புக் காவல் மையங்களுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், பொய்கள் பேசுவதில் ராகுல் வல்லவர் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். அசாமில் தடுப்பு காவல் மையங்கள் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட அறிக்கையையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.