இந்தியா

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,‌ கேரள மாநிலம் வயநாடு மக்‌களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, கேரளாவின் வ‌யநாடு தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார். அம்மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ‌ஆகும்.

இந்நிலையில், தனது சகோதரி பிரியங்காவுடன் வயநாடு வந்த ராகுல்காந்தி மாவட்ட கலெக்டர் அஜயகுமாரிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உட்பட பலர் உடனிருந் தனர். பின்னர் அங்கிருந்து பேரணி புறப்பட்டது. வேனில் நின்றபடி சென்ற ராகுல் காந்திக்கும் பிரியங்காவுக்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, ராகுல் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கேரளாவில், ராகுல் காந்தி போட்டியிட உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் துஷார் வெல்லப் பள்ளி ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளார்.