ராகுல்காந்தி X
இந்தியா

CJPக்கு ஆதரவு.. பிரதமர் மோடி இல்லம் அருகே போராட்டம்.. ராகுல்காந்தி அதிரடி கைது!!

டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி இல்லம் அருகே 2 மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Premkumar S

கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100 மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், டெல்லியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

இந்தசூழலில் தான், காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை சந்தித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் 2-வது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது ராகுல்காந்தியை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவருடன், பிரியங்கா காந்தி, அகிலேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே, இளைஞர்களின் போராட்டம், காவல்துறையின் தாக்குதல் என டெல்லி பதற்றமான சூழலில் இருந்து வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.