எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடி
எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடி ஃபேஸ்புக்
இந்தியா

"பிரதமர் மோடி தள்ளுபடி செய்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன்.." - அதிரடி பதில் கொடுத்த ராகுல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையும் முடிவடைகிறது.

இந்நிலையில், சமீபத்தில் 25 மக்களவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், பிரதமர் மோடி பரப்புரையை மேற்கொண்டிருந்தார். அதில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, பொது மக்களிடம் உள்ள சொத்தை எடுத்து பிறருக்கு கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​ தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்” என்று சர்ச்சை எழுப்பும் வண்ணம் பேசியிருந்தார்.

முதற்கட்ட பரப்புரைகளில் இங்கனம் பேசாத பிரதமர் மோடி, தற்போது இரண்டாம் கட்ட தேர்தலில் மதத்தை வைத்து சர்ச்சை பேச்சுக்களை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இதற்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தற்போது பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். 90% இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நான் கூறியதால் பிரதமர் என்னை விமர்சிக்கிறார். காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் பயந்துவிட்டார்.

பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ. 16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டில் உள்ள பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியதற்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.

அதில், “பிரதமர் மோடிக்கு தாலியின் பின்னால் உள்ள உணர்வுகள் தெரியவில்லை. போரின் போது எனது பாட்டி இந்திரா காந்தி ஆபரணங்களை நாட்டுக்காக கொடுத்தார். என் தாய் தாலியை நாட்டிற்காக தியாகம் செய்தார். ஆனால், பிரதமர் இதனை எதையும் அறியாமல் பேசுகிறார். பெண்களின் உணர்வுகள் மோடிக்கு தெரியாது.

பிரதமர் மோடி கொச்சையான அரசியலை பேசி வருகிறார், மோடிக்கு தேர்தலில் பதிலடியை மகளிர் தருவார்கள்” என்று பிரியங்கா காந்தி பதிலடிக்கொடுத்துள்ளார்.