இந்தியா

“வெறுப்பு அரசியலில் ஈடுபட்டார் மோடி” - ராகுல்காந்தி

“வெறுப்பு அரசியலில் ஈடுபட்டார் மோடி” - ராகுல்காந்தி

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் அவுரங்கசீப் லேனில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் பிரச்னை, ஜிஎஸ்டி மற்றும் ரஃபேல் முறைகேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தத் தேர்தல் நடப்பதாக கூறினார். தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு அரசியலை கையில் எடுத்தார் என்றும், ஆனால் காங்கிரஸ் அன்புடன் பரப்புரையில் ஈடுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸின் இந்த அன்பான அணுகுமுறையால், தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் தேர்தலில் பிரதமர் மோடிக்கும் தனக்கும் இடையே நல்ல போட்டி நிலவியதாகவும் அவர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் எனவும் தெரிவித்தார். டெல்லியைப் பொறுத்தவரை மக்கள்தான் முடிவை தீர்மானிப்பார்கள் எனவும் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை தான் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் வாக்களித்தார். அவருடன் கணவர் ராபர்ட் வதேராவும் வந்து வாக்களித்தார். டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயா என்ற பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இருவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். 

முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நிர்மாண் பவன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீக்ஷித் உடன் வந்தார்.