சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இந்த நிலைமையைச் சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அதே நேரம் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மே-4ம் தேதி வெளியாகியிருக்கும் இந்தநிலையில் தான், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால் நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள இயலாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தது கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்தசூழலில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டங்கள் தெரிவித்துவரும் நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசின் தவறான முடிவுகளுக்கு, பொதுமக்கள் தான் விலையைச் செலுத்த வேண்டியிருக்கிறது என்ற கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கிறார். தொடர்ந்து, 3 ரூபாய் விலை உயர்வு ஏற்கனவே, வந்துவிட்டது எனவும், மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் அரசு வசூலிக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.