குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அக்கட்சியின் நிர்வாகி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைதலைவர் ராகுல் காந்தி நேற்று குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது அவரின் கார் தாக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும், குஜராத் அரசினை கலைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். டி.எஸ்.பி.அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 200 அடி உயரம் கொண்ட வயர்லெஸ் டவரில் ஏறிய அவர், கீழே குதிக்கப்போவதாகவும் தற்கொலை மிரட்டல் விடுத்தார். காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவரான அவரின் பெயர் அய்யலுச்சாமி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தில் ராகுல் கார் அணிவகுப்பு மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸார் கலந்துக்கொண்டு மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.