இந்தியா

போலீஸ் ஸ்டேஷனில் ராதே மா-வுக்கு வரவேற்பா?

webteam

டெல்லி காவல் நிலையத்தில் தன்னை, சாமியார் எனக் கூறிக்கொள்ளும் ராதே மா-வுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் பெண் சாமியார் ராதே மா (46). அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர் மீது, மும்பையில் இரு வழக்குகளில் விசாரணை உள்ளது. இந்நிலையில் டெல்லி விவேக் விகார் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி இருக்கையில் அமர்ந்து ராதே மா பேசும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் மலர்களை தூவி வரவேற்றுள்ளனர்.  
இதுபற்றி விவேக் விகார் போலீஸ் அதிகாரி சஞ்சய் சர்மா கூறும்போது, ‘ஸ்டேஷனுக்கு வந்த ராதே மா, கழிவறை போக வேண்டும் என்றார். அனுமதித்தேன். அங்கிருந்து திரும்பியவர் என் அனுமதி இல்லாமலேயே என் சேரில் உட்கார்ந்தார். அவர் மத ரீதியிலானவர் என்பதால், நான் கைகளை கட்டி நின்று அவரை எழுந்து போகச் சொன்னேன். அவ்வளவுதான். வேறு மரியாதை எதையும் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சஞ்சய் சர்மா மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.