இந்தியா

திடீர் மாரடைப்பால் இறந்த தந்தை - வாகனத்தை சிறப்பாக நிறுத்திய சிறுவன்

webteam

கர்நாடகா மாநிலத்தில் வண்டி ஓட்டும் போதே தந்தை மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து அவரது 10 வயது மகன் வண்டியை சமார்த்தியமாக நிறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தூம்கூரிலுள்ள தூர்காதாஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(35). இவருக்கு முனிரத்னம்மா என்ற மனைவியும் புனிர்த் (10), நரசிம்மராஜூ(5) என்ற மகன்களும் உள்ளனர். இவர் ஒரு குக்கர் நிறுவனத்தில் வாகன ஓட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல் தனது வாகனத்தில் குக்கர் சாமான்களை ஏற்றிக்கொண்டு ஹூலியாறு பகுதியிலுள்ள ஒரு கடைக்கு டெலிவரி செய்ய சென்றார்.

அப்போது விடுமுறை நாள் என்பதால் அவரது 10 வயது மகன் பூனிர்த்தும் அவருடன் சென்றார். இவர்கள் இருவரும் வாகனத்தில் பயணம் செய்தனர். சரியாக மதியம் 12 மணியளவில் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உயிரிழந்தார். 

ஆகவே அந்த வாகனம் கட்டுப்பாட்டு இழந்து சென்றது. தந்தைக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் திகைத்து நின்ற மகன் பூனிர்த் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இதனால் வாகனம் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தனது தந்தை இறந்த நிலையிலும் வாகனத்தை விபத்திலிருந்த காத்த சிறுவனின் செயல் அனைவரின் நெஞ்சத்தையும் ஈத்துள்ளது.