Puri Jagannath  web
இந்தியா

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை | கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் பலி? 100க்கும் மேற்பட்டோர் காயம்!

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் சிக்கி, ஒருவர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

PT WEB

ஒடிஷா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரை, உலகில் நடைபெறும் பழைமையான விழாக்களில் ஒன்று. இந்த விழா சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படுவதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

Puri Jagannath

பூரியில் உள்ள 'படா தண்டா' (கிராண்ட் ரோடு) பகுதியில், மரிச்சிகுண்ட் சதுக்கத்தில் ஜெகநாதர், பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் புனிதத் தேர்களை இழுப்பதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயன்றதால், ரத வீதியில் கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த பக்தரின் இறப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. மேலும் கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களைச் சிறப்பு மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.