மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2020-இல் பாஜகவுடனான தனது 25 ஆண்டுகால கூட்டணியை அகாலி தளம் முறித்துக் கொண்டது. அதன்பின் 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது. இந்த நிலையில், சிரோன்மணி அகாலி தளத்தின் (SAD) தலைவரான சுக்பிர் சிங் பாதல், புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இரு கட்சிகளும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இரு கட்சிகளும் பஞ்சாப் தேர்தலில் தனித்தே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு, ஆளுகை, நலத்திட்டங்கள் வரையிலான பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இரு கட்சிகளும் தத்தமது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த முயன்று வரும் சமயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. “அகாலி தளம் - பாஜக மீண்டும் இணைந்தாலும் அது தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார். இவர்களுடைய சந்திப்பை ஆம் ஆத்மியும் விமர்சித்துள்ள நிலையில், அது வரும் தேர்தலில் அக்கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.