இந்தியா

ஃபேன்ஸி மொபைல் எண் பெற்றுத்தருவதாக ரூ.1.11 லட்சம் நூதன மோசடி

webteam

விரும்பிய மொபைல் எண்ணை பெற்றுத்தருவதாகக் கூறி ரூ1.11 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தங்களுக்கு பிடித்த நிறத்தில் பொருட்களை வாங்கிக் கொள்வது போன்று சிலர் தாங்கள் விரும்பிய படி கார் எண்ணை பெற முயற்சிப்பார்கள். அதற்காக நிறைய பணமும் செலவு செய்வார்கள். அந்த வகையில் சிலர் பிடித்தமான மொபைல் எண் பெற முயற்சிப்பார்கள். அப்படிதான் தனக்கு பிடித்தமான ஃபேன்ஸி எண்ணை பெறுவதற்காக ஒருவர் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஏமாற்றம் அடைந்த புனேவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி எனக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. நீங்கள் விரும்பும் எண்களில் மொபைல் எண்கள் பெற்றுத் தரப்படும் என போனில் பேசிய நபர் கூறினார். அதேபோல், சில வங்கிக் கணக்குகளை கொடுத்து பணமும் அனுப்பச் சொன்னார். ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை நான் அனுப்பினேன். ஆனால், சொன்னபடி நான் கேட்ட மொபைல் எண்ணை அவர் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக புனே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.