இந்தியா

புல்வாமா தாக்குதல் : 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

webteam

காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் வழக்கில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்தச் சம்பவத்தில், மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. உளவுத் துறை எப்படி தோல்வி அடைந்தது? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் வழக்கில் என்ஐஏ 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசார் உள்ளிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பலரது பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.