இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு 80 கிலோ ஆர்டிஎக்ஸ்: விசாரணையில் தகவல்

webteam

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு 80 கிலோ சக்தி வாய்ந்த ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம்  78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 44 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் இறந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் 7 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு 80 கிலோ எடையிலான சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த திட்டங்களை தீட்டியது பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ரான் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்ற சந்கேதத்தின்பேரில், புல்வாமா, அவந்திபுரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், டிரால் பகுதியில் உள்ள மிடூரா என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினர், ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.