புல்வாமாவில் இந்தியப் படைகளை தாக்குவதற்காக பயங்கரவாதிகள் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒய்எஸ்எம்எஸ் என்ற அதிநவீன மென்பொருள் மூலமாகவோ அல்லது அதுபோன்ற மொபைல் செயலி மூலமோ பயங்கரவாதிகள் தகவல் தொடர்பில் இருந்திருக்கலாம் எனப் பாதுகாப்புத் துறையினரும், உளவுத் துறையினரும் யூகித்துள்ளனர். உளவுத் துறையினரின் தீவிர ஆய்வுக்குப் பின் சிக்கிய ஒரு ஒய்எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி அடிப்படையில் அவர்கள் இத்தகைய நவீன நுட்பங்களை பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அதில் ஜெய்ஷ் இ முகமதுவின் எதிரிகளது இறுதி ஊர்வலம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒய்எஸ்எம்எஸ் மென்பொருள் தகவல் தொடர்பு என்பது மிக உயர் அதிர்வெண் ரேடியோ அலைவரிசையில் இயங்கக் கூடியது. சிம் கார்டு இல்லாத ஸ்மார்ட் ஃபோனையும், ரேடியோவையும் பயன்படுத்தி இந்த ரகசிய தகவல் தொடர்பு நடைபெறும். இம்முறையிலான தகவல் தொடர்புகளை வழக்கமான கண்காணிப்பு சாதனங்கள் மூலம் இடைமறித்து கேட்க முடியாது.
இதுபோன்ற தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்துவது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு தெரிந்தாலும், அதை இடைமறித்து கேட்க இயலாத நிலை உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புல்வாமா தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியாதது ஏன் ? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.