இந்தியா

புதுச்சேரி: நாளை முதல் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

webteam

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது மாநிலத்திலுள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. உணவகங்கள் மட்டும் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு தற்போது அமலிலுள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே கூடுதல் தளர்வுகளுடன் நாளை முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும் என்றும், இருப்பினும் பண்டிகை காலம் என்பதால் இரவு நேரங்களில் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி திருவிழாக்கள் நடத்த வேண்டும் என்றும், திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி, புதுச்சேரியில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.