இந்தியா

ரூ.12 லட்சமா..! அப்பார்ட்மெண்ட் காவலாளிக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

webteam

புதுச்சேரியில் அபார்ட்மெண்ட் காவலாளியாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ.12 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன், இவர், அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு வழக்கமாக மாத மின் கட்டணம் ரூ. 800-க்குள் வருவது வழக்கம். ஆனால், கடந்த மாத உபயோகத்திற்காக ரூ. 680 மின் கட்டணமாக வந்த நிலையில், இந்த மாதம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்குச் சென்று விபரம் கேட்டார்.

இதையடுத்து தவறுதலாக அச்சாகியுள்ளது. இதை சரிசெய்து தரப்படும் என உறுதியளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.