இந்தியா

மத்திய அரசு அனுமதி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று பட்ஜெட் தாக்கல்

webteam

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த 10 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், புதுச்சேரியில் கூட்டணியில் இருந்தபோதும், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால், அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் ரூபாய் 11 ஆயிரம் கோடிக்கு நிதி ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு ரூபாய் 10,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது.  நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையடுத்து பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.