இந்தியா

புதுச்சேரி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சமையல் எண்ணெய் இலவசம்

Veeramani

புதுச்சேரியில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவுப்பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகை காலத்தில் இலவசமாக சர்க்கரை கிடைக்கும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக கிடைக்கப்பெறுவர். இவை தொடர்பாக அமைச்சரவை சார்பில் அனுப்பப்பட்ட கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பல முறை அனுப்பப்பட்ட கோப்புகளை அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏற்கவில்லை என்பது நினைவுக் கூறத்தக்கது.