இந்தியா

'அதிகாரத்தை விட்டுக்கொடுத்து விட்டார் புதுச்சேரி முதல்வர்' - நாராயணசாமி குற்றச்சாட்டு

ஜா. ஜாக்சன் சிங்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது அதிகாரத்தை ஆளுநருக்கு விட்டுக்கொடுத்து விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயண சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

தனக்கான அதிகாரத்தைஆளுநருக்கு வழங்க முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்து விட்டார். அமைச்சர்களின் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார் துணைநிலை ஆளுநர். அதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை முதல்வர் நடத்தி இருக்க வேண்டும். ஒரு செயல்படாத அரசாக ரங்கராமி அரசு உள்ளது. அவரது ஆட்சியில் ஊழல் மலித்து காணப்படுகிறது. குறிப்பாக, புதுச்சேரியில் வெளிநாட்டு மதுபான ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க கோடிக்கணக்கில் கமிஷன் கேட்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு நல்ல காலம் வருகிறது என தமிழிசை சொல்லி வருகிறார். ஆனால் ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை. புதுச்சேரிக்கு இதுவரை நிரந்தர துணைநிலை ஆளுநர் நியமிக்காததற்கு என்ன காரணம்? தெலங்கானாவில் தமிழிசைக்கு வேலை இல்லையா? ஏன் முழு நேரமும் புதுச்சேரியிலேயே அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.