புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாரயணசாமி Pt web
இந்தியா

புதுச்சேரி | முன்னாள் முதல்வருக்கு சீட் கொடுக்காத காங்., நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்.

Premkumar S

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 9-ன் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது. பாஜக - என்.ஆர். காங்கிரஸ் உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணியில் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டுவிட்ட நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகே தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவடைந்திருக்கிறது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள 30 இடங்களில் 16-ல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 12 திமுக, 1 விசிக மற்றும் 1 தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாராயணசாமி

தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை ஒருவழியாக முடிந்த நிலையில் தான் மீண்டும் ஒரு பிரச்னை புதுச்சேரி காங்கிரஸில் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்கவில்லை. நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பிய நாராயணசாமி, வேட்புமனு தாக்கல் செய்யவும் எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படாததது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், நாராயணசாமியின் ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை முற்றுகையிட்டனர். நாராயணசாமிக்கு சீட் வழங்காத வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த வைத்திலிங்கத்தின் காரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

நாராயணசாமி ஆதரவாளர்கள்

அதேபோல, காரைக்காலில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த காரைக்கால் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரமோகனை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது கண்டிக்கத்திற்குரியதும், வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக போராடிய முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சி தலைமை மீது தாங்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சூழலில் தான், புதுச்சேரி முன்னாள் முதல்வருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது. அவர் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.