இந்தியா

கங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம்

கங்கையின் தூய்மைக்காக உண்ணா விரதமிருந்த பேராசிரியர் மரணம்

webteam

கங்கை நதியை சுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜி.டி. அகர்வால் உயிரிழந்தார்.

ஜி.டி.அகர்வால் என்பவர் கான்பூரில் உள்ள தொழில்நுட்ப மையம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்தவர். அத்துடன் தேசிய கங்கை நதி நீர் ஆணையம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் பதவிகளிலும் இருந்தவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்மிகத்தில் மூழ்கி, தனது பெயரை சுவாமி கியான் சுவரூப் சனாந்த் என மாற்றிக்கொண்டார். இவர் நீண்ட காலமாக கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தவர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் உத்தராகாண்ட்டில் உள்ள ஹரித்வார் நகரத்தில், கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், அந்த நதியில் அமல்படுத்தப்படும் சுரங்கப்பணி மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் நூறு நாட்களையும் கடந்தது. நூறு நாட்களுக்கு மேல் தண்ணீர் மற்றும் தேன் மட்டுமே குடித்து போராடி வந்ததால், அவரது உடல் எடை 20 கிலோ குறைந்தது. அத்துடன் உடல் ரீதியான பிரச்னைகளும் ஏற்பட்டது. போராட்டம் 110வது நாளை எட்டிய நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.