இந்தியா

“உள்துறை அமைச்சரும் காவல்துறையினரும் பொய் சொல்கிறார்கள்” - பிரியங்கா காந்தி ட்வீட்

“உள்துறை அமைச்சரும் காவல்துறையினரும் பொய் சொல்கிறார்கள்” - பிரியங்கா காந்தி ட்வீட்

webteam

ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் நுழைந்து டெல்லி போலீசார் மாணவர்களை தாக்கும் வீடியோ குறித்து, பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

கல்லூரிக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். நூலகத்தில் நுழைந்த போலீசார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை தாக்கியதாக பல்கலைக்கழகம் குற்றஞ்சாட்டியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஜாமியா நகரைச் சேர்ந்த முஜீபர் ரஹ்மான் என்பவரது மகன் சயான் முஜீப்பும் ஜாமியா பல்கலை.யில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து வந்தார். அவரும் போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் சயானின் இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. மேலும் ஒரு மாணவர் தனது கண்ணை இழந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, jamia coordination committee என்ற பெயரில் செயல்படும் ட்விட்டர் கணக்கில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் டெல்லி போலீசார் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை scroll.in என்ற இணையதளம் வெளியிட்டதுடன் அதன் நம்பகத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாக படிக்கும் மாணவர்களை எப்படி அடித்துக்கொல்கிறது என்று பாருங்கள். ஒரு சிறுவன் புத்தகத்தைக் காட்டுகிறான், ஆனால் போலீஸ்காரர் தடியால் தாக்குகிறார். ஆனால் உள்துறை அமைச்சரும் டெல்லி காவல்துறை அதிகாரிகளும் நூலகத்திற்குள் நுழைந்து யாரையும் அடிக்கவில்லை என்று பொய் சொல்கிறார்கள்”எனக் குறிப்பிட்டுள்ளார்.