சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேராவிற்கு வீடு உள்ளதாவும், அச்சொத்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் வதேராவை கைது செய்ய வரும் 16-ஆம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அப்போது, லண்டனில் உள்ள அசையா சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன..? பணப்பரிமாற்றங்கள் எப்படி நடந்தது..? யாருக்கெல்லலாம் இதில் தொடர்புள்ளது..? என்பது உள்ளிட்ட கேள்விகளை வதேராவிடம் அதிகாரிகள் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு பதிலளித்த ராபர்ட் வதேரா, தனக்கு லண்டனில் சொத்துகள் ஏதும் இல்லை எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மற்றொரு வழக்கிலும் வரும் 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா ஆஜராக உள்ளார்.
முன்னதாக ராபர்ட் வதேரா அவரது மனைவி பிரியங்கா காந்தியுடன் சிறப்புக் காவல் அதிகாரிகள் சூழ, டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார். கணவரை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு, பிரியங்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது பேசிய பிரியங்கா, இவ்வழக்கில் தனது கணவருக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். ராபர்ட் வதேரா மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் விசாரணை அமைப்பு ஒன்றிடம் அவர் ஆஜராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.