சிறுமியின் உயிரை காக்க பிரியங்கா காந்தியிடம் உதவி கேட்கப்பட்ட நிலையில் உடனடியாக அவர் தனி விமானத்தை ஏற்பாடு செய்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை 6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (உத்தரப்பிரதேசம் கிழக்கு) பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் கட்டியால் பாதிக்கப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் சிறுமிக்கு உயர்தர சிகிச்சையளிக்க உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லா, பிரியங்கா காந்தியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார் பிரியங்கா காந்தி. இதனையடுத்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் உடனடியாக தனி விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.