இந்தியா

குஜராத் செல்லும் பிரதமர் மோடி -2 நாள் பயணம்.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

webteam

இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மற்றும் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். நாளை காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் பின்னர் நண்பகல் 12 மணி அளவில் புஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மற்றும் பிற்பகல் 5 மணி அளவில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுகிறார்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் காதி விழா, விடுதலைப் போராட்ட காலத்தில் காதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற உள்ள இந்த விழாவில், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் அதிகமான பெண் காதி கைவினை கலைஞர்கள் பங்கேற்று ராட்டையில் நூல் நூற்பார்கள்.

மேலும், 1920-க்குப் பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது, குஜராத் அரசின் கிராமோத்யோக் வாரியத்திற்கான புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் பிரதமர், சபர்மதியில் நடை மேம்பாலத்தையும் திறந்து வைக்கவிருக்கிறார்.

பின்னர் புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைக்கிறார். புஜ் பகுதியில் மையம் கொண்ட 2021 நிலநடுக்கத்தின் போது சுமார் 13,000 பேரின் வாழ்க்கை பறிக்கப்பட்ட பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாக 470 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் இந்த நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்மிருதி வன நிலநடுக்க அருங்காட்சியகம் 7 கருப்பொருட்கள் அடிப்டையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து புஜ் பகுதியில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் பல திட்டங்களை தொடங்கிவைத்து, புஜ்-பீமாசார் சாலை உட்பட ரூ.1,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

மேலும் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது ரூ.7,300 கோடி முதலீட்டில் ஹன்சால்பூரில் அமையவிருக்கும் மின்சார வாகன மின்கலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இதே போல் ரூ.11,000 கோடி முதலீட்டுடன் ஹரியானாவின் ஹர்கோடாவில் பயணிகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.