இந்தியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு தலா ரூ.3 லட்சம் உதவி - பிரதமர் அலுவலகம்

Sinekadhara

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த மரியசாந்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த பிஜூ விக்டர் ஆகிய இருவருக்கும் உதவி செய்யுமாறு மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து மரியசாந்தி மற்றும் பிஜூ விக்டர் ஆகிய இருவரின் சிகிச்சைக்காக தலா 3 லட்சம் ரூபாயை சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் உரிய ஆவணங்களின் நகலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.