இந்தியா

பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு அமீர்கான் ஆதரவு - மோடி நன்றி

webteam

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு அளித்தற்கு பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாடிய போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதனை வரும் தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அத்துடன் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் அகற்றம் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்பது நம் அனைவரின் முடிவில் தான் இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் அமீர் கானுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளித்தற்கு அமீர் கானுக்கு எனது நன்றி. உங்களுடைய ஆதரவின் மூலம் பலர் இந்தப் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தில் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.