இந்தியா

“300 கி.மீட்டர் தூரத்திலுள்ள விண்கலத்தை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை” - பிரதமர் பெருமிதம்

webteam

விண்வெளியில் இந்தியா வியத்தகு சாதனையை படைத்துள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை கூட்டத்தில் இன்று விவாதித்தார். இதையடுத்து முக்கியமான தகவலுடன் நாட்டு மக்களிடம் 15 நிமிடத்திற்கு உரையாற்ற உள்ளேன் எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார். அதனால் பிரதமர் மோடி என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையேயும் எழுந்தது. 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்த பரப்புரை தொடங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையாற்றினார். டிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார்.

அப்போது அவர், “விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைகோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனையில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. உலகில் மிக முக்கியமான மூன்று நாடுகள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

‘மிஷன் சக்தி’என்ற இந்தச் சோதனை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டது. 300 கி மீட்டர் தொலைவில் சென்று தாக்கக் கூடிய ஒரு சோதனையில் இந்தியா விண்வெளியில் சாதித்துள்ளது. இந்தச் சோதனைக்கு எல்.இ.ஓ. என்று பெயர். அதாவது ‘லோ எர்த் ஆர்பிட்’என்பது இதன் விரிவாக்கம். இது லைவ் சேட்டிலைட்டை அடித்து வீழ்த்துயுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர எந்த நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. ‘மிஷன் சக்தி’யை வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். விண்வெளியில் இந்தியா பெரிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சோதனை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும்” எனப் பேசினார்.