இந்தியா

பிரதமர் மோடி பாஜக ஆளும் 17 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

Veeramani

இரண்டு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து வாரணாசியில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பா.ஜ.க. தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்புச்செயலாளர் சந்தோஷ் மற்றும் கட்சியின் உ.பி., காசி மண்டலப்பிரிவுகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் தங்கள் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம், கட்சி வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்கள் விளக்கமாக எடுத்துக்கூறினர். கூட்டத்திற்கு பின்பு, துணை முதல்வர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு முதல்வர்கள் செல்ல உள்ளனர். இதுமட்டுமின்றி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர்கோயிலுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நாளை (டிசம்பர் 15-ஆம் தேதி) செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் ஒருபுறம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் ஆலோசித்ததாக தகவல் என்பது வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கொள்கையை பா.ஜ.க. பேசி வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.