இந்தியா

கொரோனா பரவல்: ஏப்.8இல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

sharpana

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் , ஏப்ரல் 8இல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் குறித்தும், கொரோனா பரவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு அண்மை காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது அதிகபட்சமாக செப்டம்பர் 17ஆம் தேதி 98 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வேளையில் 52 ஆயிரத்து 847 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 478 ஆக உள்ளது. இது ஒருபுறமிருக்க தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை 7 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.