இந்தியா

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ? - மத்திய அரசு பரிசீலனை

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ? - மத்திய அரசு பரிசீலனை

webteam

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெப்பு கோரினார். 6 நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 99 வாக்குகளே பெற்றதால் அரசு கவிழ்ந்தது. 

இதையடுத்து, 105 இடங்களைக் கொண்டுள்ள பாரதிய ஜனதா ஆட்சியமைக்க உரிமை கோரும் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதியிழப்பு செய்வதா, ராஜினாமாவை ஏற்பதா என்பதில் சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. 

அவர் தாமதப்படுத்துவதால் ஆட்சி அமைக்க இயலாத சூழலில் பாஜக உள்ளது. ஏனெனில், சபாநாயகர் முடிவெடுக்காதபோது அரசு அமைத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரும்பட்சத்தில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படலாம். இதனால், ஆட்சி அமைக்க அக்கட்சி அவசரம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில், கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையை முடக்கி வைத்து சிறிது காலம் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.