இந்தியா

'தடுப்பூசி பிரச்சாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும்' - ராம்நாத் கோவிந்த்

JustinDurai

கொரோனா எனும் நெருக்கடி தீரும் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதை பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

73 ஆவது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். உள்நாட்டிலும், அயல் நாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்த குடியரசுத் தலைவர், நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பதுபோல தடுப்பூசி பிரச்சாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும் எனக் கூறினார். கொரோனாவுக்கு எதிராக நாடு வலியுமையுடன் போராடி வருவதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எவ்வித தளர்வுக்கும் இடம் கொடுக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

புதுமையான பொருளாதாரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 50 ஆவது இடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த குடியரசுத் தலைவர், நாம் கடைப்பிடிக்கும் நாகரீகம் பழமையானது என்றாலும், நமது குடியரசு புதியது என பெருமிதத்துடன் கூறினார்.