madhya pradesh
madhya pradesh twitter
இந்தியா

ம.பியில் கொடூரம்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து கொளுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண்ணை, 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அம்பா நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சந்த்காபுரா கிராமத்தில் நேற்று (பிப்.16) நடைபெற்றதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கிறார்.

மாதிரிப் படம்

இந்த வழக்கில் தனது கணவர் மீது குற்றம்சுமத்திய பெண்ணிடம் சமரசம் பேசுவதற்காக சந்த்காபுரா கிராமத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு இந்தக் கர்ப்பிணிப் பெண் சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 3 ஆண்களும் கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணின் மீது தீயைப் பற்றவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து கர்ப்பிணிப் பெண் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!