பஞ்சாப்
பஞ்சாப் முகநூல்
இந்தியா

இரட்டை குழந்தைகளை சுமந்த மனைவியை ஈவு இரக்கமின்றி தீ வைத்து கொன்ற கணவர்! பஞ்சாபில் பகீர் சம்பவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ளது புல்லேநங்கல் கிராமம். இக்கிராமத்தில், சுக்தேவ் தனது மனைவி பிங்கியுடன் வசித்து வந்தார். 6 மாதம் கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுக்தேவ்விற்கும் அவரது மனைவி பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாடு முற்றவே அதனால் சண்டையும் அதிகரித்துள்ளது. இப்படி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என்று உறவினர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்முறை ஏற்பட்ட சண்டை பெரிய விபரீதத்தில் சென்று முடிவடைந்துள்ளது.

சண்டையின்போது ஆத்திரமடைந்த சுக்தேவ் தனது மனைவியை கட்டிலில் கட்டிப் போட்டு தீ வைத்துள்ளார். இதனால்,வயிற்றில் தனது இரட்டை குழந்தைகளுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பிங்கி.

இதனனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து சுக்தேவ் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்படவே, சுக்தேவ்வை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவ தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட தேசிய மகளிர் ஆணையம், பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குனரிடம் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த பதிவில்,

”அமிர்தசரஸில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவியை தீ வைத்து எரித்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலின் கொடூரம் கற்பனை செய்ய முடியாதது. மாண்புமிகு தலைவர் NCW @ஷர்மரேகா குற்றவாளியை கைது செய்து மூன்று நாட்களில் நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.” என்று பதிவிட்டுள்ளது.