கிருஷ்ணர் பற்றி தான் வெளியிட்ட கருத்துக்காக, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், மன்னிப்புக் கேட்டார்.
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்–மந்திரியாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், ஈவ்–டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி உள்ளார். இதற்கு ரோமியோ எதிர்ப்பு படை என பெயரிடப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் தளத்தில் விமர்சித்திருந்தார்.
‘ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். பகவான் கிருஷ்ணர்தான் புகழ்பெற்ற ஈவ் டீசர். சிறப்பு படையினரை ‘கிருஷ்ணா எதிர்ப்பு படை’ என அழைக்க, யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் இருக்கிறதா?’என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் தேஜிந்தர் பால், கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை பூஷன் புண்படுத்திவிட்டார் என டெல்லி போலீசிலும், உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜீஷன் ஹைதர், லக்னோ போலீசிலும் தனித்தனியாக புகார் செய்துள்ளனர்.
எதிர்ப்பு அதிகமானதை அடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தை பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டரில் இருந்து நீக்கினார். எனது டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.