இந்தியா

தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

JustinDurai

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மருத்துவர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றினர். எனினும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நுரையீரல் தொற்று பிரச்சினை மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.