இந்தியா

பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் : பிரணாப் முகர்ஜி உரை

webteam

பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் என பிரிவு உபச்சார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.  

நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து இன்றுடன் விடைபெறும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி இன்று இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காக கடமையாற்றியுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டிற்காகக் கொடுத்ததை விட நான் பெற்றுக்கொண்டதே அதிகம். சிறப்பாகப் பணியாற்றியதை நான் சொல்வதை விட காலம் சொல்வதுதான் சரியாக இருக்கும். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும். எனது பதவிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டுக்காகவே கடமையாற்றியுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொண்டேன். 

நாடாளுமன்றம் எனது கோவில். மக்களுக்கு சேவை செய்வதுதான் எனது விருப்பம். கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றின் பெருக்கம்தான் இந்தியாவின் சிறப்பு. சகிப்புத்தன்மையில் இருந்து நமது பலத்தை பெறுகிறோம். இது நூற்றாண்டுகளாக நமது கூட்டு உணர்வின் ஒரு பகுதியாகும். கல்வியின் உருமாற்ற சக்தியின் மூலம் சமூகத்தை மறுசீரமைப்பது சாத்தியமாகும். எனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நாங்கள் ஒரு மனிதாபிமான மற்றும் மகிழ்ச்சியான நகரத்தை உருவாக்க முயற்சித்தோம். ஏழை மக்களின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.